எடுத்த காரியம் வெற்றிபெற, செய்வினைகள் அகல, விடமிறங்கப் பாடவேண்டிய திருநீலகண்டப் பதிகம் – அவ்வினைக்கு இவ்வினையாம்

 
 

எடுத்த காரியம் மற்றும் வேலைத்திட்டங்கள் வெற்றி பெறுவதற்கும் , விடம் நீங்கவும் , தொண்டையிலுள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி நல்ல குரல் வளம் பெறுவதற்கும் , செய்வினை , பில்லி சூனியங்கள் பாதிக்காமல் இருக்கும் பொருட்டும் , துணிவுடன் செயலாற்றுவதற்கும் , இளைய சகோதரன் நலம் பெறுவதற்கும் காலையும் மாலையும் எல்லாம்வல்ல திருச்செங்கோடு தான்தோன்றி ஈசுவரர் மற்றும் பாகம்பிரியாள் அம்மையாரை நினைத்து படவேண்டிய திருப்பதிகம்.

திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுக் கோயில் பயணத்தினை முடித்து , வேறும் சில கோயில்களை வணங்கி திருக்கொடி மாடச் செங்குன்றூர் எனும் திருச்செங்கோடு வந்தடைந்தார்.அங்கே இந்தப்பதிகத்தினை பாடியருளினார்.

திருச்சிற்றம்பலம்

இறைவன்: தான்தோன்றி ஈசுவரர் இறைவி: பாகம்பிரியாள் பண் : வியாழக்குறிஞ்சி இராகம்: சௌராஷ்ட்டிரம்

அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃது அறிவீர்
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்  – 1-116-1

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனிமனத்தால்
ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-2

முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டெமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவையுடையீர்
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-3

விண்ணு உலகு ஆள்கின்ற விச்சாதரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்று உடையீர் உம் கழல் அடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-4

மற்று இணை இல்லா மலை திரண்டு அன்ன திண்தோள் உடையீர்
கிற்று எமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம்திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-5

மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பு இல் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்து உமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்பு இலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-6

இப்பதிகத்தில் 7ம் செய்யுள் சிதைந்து போயிற்று - 1-116-7

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம்கழல் அடிக்கே
உருகி மலர்கொடு வந்து உமை ஏத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-8

நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றம் அது ஆம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-9

சாக்கியப் பட்டும் சமண்உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும் விட்டார்
பூ கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம் – 1-116-10

பிறந்த பிறவியில் பேணி என் செல்வன் கழலடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர் கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே – 1-116-11

மனிதப் பிறப்பெடுத்த இந்தப்பிறவியிலேயே சிவபெருமானின் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம்.பழவினைகளின் பலனால் மீண்டும் பிறப்பு எடுத்தாலும் , தேவர்களின் தலைவனாகிய ஈசனின் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓதுபவர்கள் , இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.

திருச்சிற்றம்பலம்



பாடல் பெற்ற சிவத்தலம் - திருத்தலைச்சங்காடு

மேலும் வாசிக்க...
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் கீர்த்தி திருஅகவல்

மேலும் வாசிக்க...
இருதயநோய் விலக அதன் வலிமை குறையை பாடவேண்டிய பதிகங்கள்

மேலும் வாசிக்க...